குலவை

பெண்கள் வாயால் எழுப்பும் ஒருவகை ஓசை.

குலவை என்பது தமிழர்கள் எழுப்பும் மங்கல ஒலி ஆகும். இது பெரும்பாலும் பெண்களால் எழுப்பப்படும். கைகளை வாயருகே வைத்த நிலையில் உதடுளைக் குவித்து வைத்து நாக்கினைக் கிடைமட்டமாக இரு புறமும் அசைப்பதன் மூலம் உலுலுலுலுலுலு என்ற குலவை ஒலி உண்டாக்கப்படும்.

நாற்று நடவு, அறுவடை போன்ற உழவு வேலைகளின் போதும் பூப்புனித நீராட்டு போதும் இறை வழிபாட்டின் போதும் குலவை போடுதல் நடைபெறும்.

போடுங்கம்மா குலவை என்பது காளியம்மன் / மாரியம்மன் கோவில் விழாக்களின் போது முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வந்த பின்பு கோவிலில் முளைப்பாரியை இறக்கி வைத்து பெண்கள் அவற்றைச் சுற்றிக் கும்மி அடிக்கும் போது பாடும் பாடல் ஆகும்.

  • கிராமியப் பாடல்களில் தாலாட்டுப் பாட்டுக்கு அடுத்து நாம் பார்க்க இருப்பது குலவைப்பாடல். இந்தக் குலவைப்பாடல் என்பது ஒரு பெண் பாடல் சொல்ல அவள் முடிக்கும் போது மற்றவர்கள் சேர்ந்து வாய்க்குள் நாக்கைச் சுழற்றி ஒருவித ஒலி எழுப்புவார்கள்.
  • அந்த ஓலி கேட்பதற்கு அவ்வளவு அழக்காக இருக்கும். குலவைப் பாடல் சொல்லும் பெண் பெரிய பாடகி அளவிற்கு பாடவில்லை என்றாலும் ராகத்தோடு பாடும்போது அந்தக் குரலும் ரசனைக்குரியதாகத்தான் இருக்கும்.
Sound of kurava
  • குலவைப் பாடல்கள் பெரும்பாலும் நாற்று நடவின் போதும் திருவிழாவின் போதும் பாடப்படும். முன்னெல்லாம் வயல்களில் விவசாய நேரத்தில் ஆங்காங்கே குலவைப் பாடல் கேட்கும். வயலில் நாற்று நடும்போது குனிந்தபடியே நடவு செய்யும் பெண்கள் தங்கள் மீது அடிக்கும் வெயிலில் உக்கிரத்தில் முதுக்குப்படை தீயாய் எரிவதையும் குனிந்தே நிற்பதால் இடுப்பில் ஏற்படும் வலியையும் மறக்கவே இந்தப் பாடல்களைப் பாடுவார்கள்.
  • அவர்கள் பாட ஆரம்பிக்கும் முன்னர் ரோட்டோரத்தில் வயலென்றால் ரோட்டில் ஒரு துண்டை விரித்து அதன் மீது ஒரு நாற்று முடியை வைத்து குலவை போட ஆரம்பிப்பார்கள். இதுவே ரோட்டோரத்தில் இல்லாத வயலென்றால் வரப்பில் இதுபோல் வைப்பார். அதைத் தாண்டிப் போகும் எல்லாரும் காசு போடவேண்டும் என்பது கிராமங்களில் எழுதப்படாத சட்டம்.

“மவராசன் வாராக… மண்ணெல்லாம் பொன்னாக…

நாத்து நடும் எங்களுக்கு சோறு மட்டுமில்லாம…

பொருளாவும் கொடுக்கும் புண்ணியராம் எங்க ஐயா..”

அந்த நிலத்துக்காரரை மவராசன், புண்ணியவான், உத்தமன் என்றெல்லாம் வர்ணித்துப்பாடி காசு வாங்குவார்கள். அதே போல் ஆடு, மாடு எல்லாத்தையும் பாட்டுல கொண்டு வருவாங்க…

“ஆனைகட்டி தாளடிக்க ஆறுமாசம் செல்லும்

மாடுகட்டி தாளடிக்க மறுவருசம் செல்லும்

குதிரை கட்டி தாளடிக்க கோடிநாள் செல்லும்”

இதே குலவைப் பாடல் கிராங்களில் இருக்கும் அம்மன் கோவில் திருவிழாவில் பெண்களால் பாடப்படும். கரகம் எடுத்து வரும் போது, தீபம் பார்க்கும் போதெல்லாம் குலவை போடுவார்கள். நடவைப் போலத்தான் இங்கும் ஒரு பெண் பாட்டுப்பாட மற்றவர்கள் குலவை போடுவார்கள். குலவைப் பாடல்கள் பலருக்கு சாமி வரவைத்து விடும். ஆத்தா குலவை போடுங்கத்தா என்று யாராவது சொன்னால் போதும் பெரியவர்கள் போடுகிறார்களோ இல்லையோ சின்னப் பெண்கள் கணீர்க்குரலில் பாட ஆரம்பித்துவிடுவார்கள்.

“தெற்குத் தெருவிலே தேரோடும் வீதியிலே

தேங்காய் குலைபறிச்சு வாறாளாம் மாரியாத்தா”

என்று பாடி முடிக்கும் போது சுற்றியிருப்பவர்கள் ‘உலுலுலு’ அப்படின்னு குரல் எழுப்புவார்கள்.

“மதுவாம் மதுக்குடமாம் மதுவாம் மதுக்குடமாம்

மதுவ இறக்கி வைக்க மனங்குளிர்வா மாரியாத்தா…”

“எல்லாரு வீட்டுலயும் எண்ண ஊத்தி விளக்கெறியும்

மாரியாத்தா வாசலிலே எளநித்தண்ணி நின்னெறியும்…”

இப்படி நிறையப் பாடுவார்கள்… இவையெல்லாமே அம்மனுக்கு காப்புக்கட்டி தினம் கரகம் எடுத்து கொண்டாடும் அந்த நாட்களில் பாடப்படும் பாடல்கள்… இசையில்லாமல் ஊரே கூடியிருக்க… ஒற்றைக் குரலெடுத்து அழகாய் பாடும் போது பின்பாட்டாய் குலவைச் சத்தம் ஆத்தாளை மட்டுமல்ல நம்மளையும் குளிரச் செய்யும்.

பிறவற்றைக் காண்க :

சாணம் இட்டு

மெழுகுதல்

சாணம் என்றால் மாட்டின் கழிவு ஆகும். தமிழரைப் பொருத்தமட்டில் வீடுகளை மெழுகும் போது பசுவின் சாணத்தைக் கொண்டே மெழுகுவர்.

தமிழர் பண்பாட்டு

நூல்கள்

பண்படுதல் என்றால் சீர்படுத்தல் அல்லது திருத்தல் எனப்பொருள் படும். நிலத்தைப் பண்படுத்தல் என்றால் நிலத்தை பயிர்செய்யத்தக்கவாறு சீர்படுத்தலாம்.

ஈகை

ஈகைக் குணம் உடையவர், ஊரின் நடுவே பலரும் அணுகிப் பயன் பெற முடியும் மரம் போன்று பலருக்கும் பயன் தருபவர்; ஊர் நடுவே இருப்பதால் பெண்பனையைப் போன்றவர்.

ஐந்திணைப் பொருள்

உலக மக்களும், உயிரினமும் இயங்குவதற்கு முதலாக உள்ள பொருள் முதற்பொருள். மக்கள் வாழும் நிலம் ஒருவகையான முதற்பொருள். நிலத்தின் இயக்கம் காலத்தைத் தோற்றுவிக்கிறது.